மக்கள் உரிமை படியுங்கள்

Thursday, December 23, 2010

கத்தரில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குக் கொண்ட பேராசிரியர் அப்துல்லா மற்றும் தமுமுக தலைவர் பங்குக் கொண்ட நிகழ்ச்சி


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பு அமைப்பான இந்தியா-கத்தார் இஸ்லாமியப் பேரவை அய்.கியூ.அய்.சியின் சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை டிசம்பர் 17 அன்று கத்தாரின் தலைநகர் தோஹாவில் ஒரு பெரும் மாநாடு போன்று பேராசிரியர் அப்துல்லாஹ் பெரியார்தாசன் மற்றும் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் பங்கு கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

பேராசிரியர் அப்துல்லாஹ் பெரியார்தாசன் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் ஆகியோர் அய்.கியூ.அய்.சி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியா-கத்தார் இஸ்லாமிய பேரவையின் அழைப்பின் பேரில் கடந்த டிசம்பர் 16 முதல் கத்தாரில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நிகழ்வாக அய்.கியூ.அய்.சி.யின் சார்பாக பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களும், தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வும் பங்குக் கொண்ட சிறப்பு நிகழ்ச்சி தோஹாவில் உள்ள சவூதி மர்கசில் டிசம்பர் 17 மாலை நடைபெற்றது.மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதினும் 5 மணிக்கே மக்கள் கூட்டம் அலைமோதி குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கியது.

அய்.கியூ.அய்.சியின் தலைவர் சகோதரர் இஸ்மாயில் நாகூர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அய்.கியூ.அய்.சியின் மார்க்கச் செயலாளர் மவ்லவி ஷர்புத்தீன் உமரி திருக்குர்ஆன் முழக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.அய்.கியூ.அய்.சியின் பொதுச் செயலாளர் மவ்லவி நூருல்லாஹ் பாஷா உமரி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அய்.கியூ.அய்.சியின் துணைத் தலைவர் புதுக்கோட்டை மீரான் அறிமுக உரை ஆற்றினார். ஸ்ரீலங்க இஸ்லாமிக் கவுன்சில் அமைப்பாளர் மவ்லவி ஜியாவுத்தீன் மதனி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் தியாகம் என்ற தலைப்பில் முன்னதாக சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட தமுமுகவின் சவூதி கிழக்கு மண்டலத் தலைவர் பொறியாளர் ஷபியுல்லாஹ் கான் வாழ்த்துரை வழங்கினார்.


இதன் பிறகு தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் இஸ்லாத்தின் எழுச்சி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் இன்றைய உலகில் அமெரிக்கா முதல் சீனா வரை இஸ்லாம் எவ்வாறு எழுச்சிப் பெற்று வருகின்றது என்பதை விரிவாக எடுத்துரைத்தார். இதன் பின் பேராசிரியர் அப்துல்லாஹ் பெரியார்தாசன் இஸ்லாமும் நான் கடந்து வந்த மதங்களும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஹிந்து மதத்தில் இருந்து தொடங்கி பெரியாரின் தொண்டர் பிறகு பவுத்தம் வரை தான் கடந்து வந்த பாதைகளை விவரித்த பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்கள் பிறகு 2000 முதல் பத்தாண்டுகள் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளை ஆய்வுச் செய்து இஸ்லாத்தின் தன்னை இணைத்துக் கொண்டதை விவரித்தார்.

அய்.கியூ.அய்.சியின் மக்கள் தொடர்பு அலுவலர் அறந்தாங்கி ஜாபர் அலி நன்றியுரை ஆற்றினார். அய்.கியூ.அய்.சியின் பொருளாளர் எஸ்.ஹெச். முஹம்மது நாசர், மார்க்க செயலாளர்கள் முஹம்மது நூருல் அமீன், வேலூர் முனீர் பாஷா, அலுவலகச் செயலாளர் பாரூக், மக்கள் தொடர்பு செயலாளர் அரசர்குளம் ஜபருல்லா மற்றும் பாமனி அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாடு போன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கத்தாரில் வாழும் தமிழக முஸ்லிம்களின் வரலாற்றில் இது வரை காணாத அளவிற்கு ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களும் பங்குக் கொண்டனர். இந்நிகழ்ச்சி கத்தாரில் வாழும் தமிழ் அறிந்த மக்களிடையே பெரும் பேரழுச்சியை ஏற்படுத்தியது.

கத்தாரில் கடந்த டிசம்பர் 16 அன்று அல்மில்லியன் முகாமில் உள்ள அய்.கியு.அய்.சி. கிளை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியிலும், டிசம்பர் 18 அன்று அல்கோரிலும், டிசம்பர் 19 அன்று அல்பனார் பள்ளிவாசலிலும் இரு பேராசிரியர்களும் உரையாற்றினர்.

யுஏஇ:தொழில் ஒப்பந்தம் காலவதியானால் புதிய விசா கிடைக்க 6 மாத விலக்கு இனி இல்லை


ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை ஒப்பந்தம் காலாவதியான ஒருவருக்கு புதிய வேலை அனுமதி கிடைக்க ஆறுமாத விலக்கு (Ban) நிபந்தனை இனி இல்லை என யு.ஏ.இ தொழில் அமைச்சர் ஸகர் கோபாஷ் அறிவித்துள்ளார்.

இச்சட்டம் வருகிற 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து அமுலுக்கு வரும் என அவர் தெரிவித்தார்.

மேலும் புதிய சட்டத்தில் தொழில் மாற்றம்(Transfer), ஸ்பான்சர்ஷிஃப் மாற்றம் ஆகியவற்றிலும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இம்முடிவு யு.ஏ.இ கேபினட் கூட்ட தீர்மானத்தின்படி எடுக்கப்பட்டுள்ளது.

வேலை ஒப்பந்தம் முடிந்தபிறகு வேறொரு வேலையில் சேருவதற்கு முன்னாள் உரிமையாளரிடம் (Employer) அனுமதி பெறவேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்பட்டுள்ளது. ஆனால், முன்னாள் ஸ்பான்ஷருடனான வேலை ஒப்பந்தம் முடிந்தபிறகு புதிய விசா கோரி மனு சமர்ப்பிக்கவேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

மேலும் ஒருவர் தனது பழைய தொழில் உரிமையாளரின் கீழ் குறைந்தது இரண்டு வருடமாவது வேலைப்பார்த்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் போடப்பட்டுள்ளது. அதாவது, வருகிற ஜனவரி மாதம் முதல் யு.ஏ.இயில் விசாவின் காலாவதி இரண்டு ஆண்டுகளாகும். அவ்வாறெனில் ஒருவர் தனது பழைய தொழில் உரிமையாளரின் கீழ் இரண்டு வருடங்கள் வேலைபார்த்தால் போதும்.

தொழில் உரிமையாளர் மற்றும் தொழிலாளியின்(Employee) சம்மதம் இல்லாமல் ஒப்பந்தத்தை(Contract) ரத்துச்செய்தல்(Cancel), புதிய விசாவுக்கான மனுவை அளித்தல் ஆகியவற்றுக்கு இயலக்கூடிய இரண்டு சூழல்களையும்(Cases) யு.ஏ.இ தொழில் அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.

சட்டரீதியான அல்லது ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை தொழில் உரிமையாளர் மீறுவது முதல் சூழலாகும். இரண்டாவது, தொழிலாளிக்கு தொடர்பில்லாத காரணத்தால் அவரை தொழிலிருந்து நீக்கினால் (அதாவது நிறுவனத்தை மூடிவிட்டால்), தொழிலாளி நிறுவனத்தின் மீது புகார் அளித்தால் உருவாகும் சூழலாகும். இத்தகைய சூழல்களில் அந்த நிறுவனம் இரண்டு மாதத்திற்கு மேலாக செயல்படவில்லை
என்பதற்கு விசாரணை அறிக்கை தேவை. மேலும் தொழிலாளி தொழில் அமைச்சகத்தில் புகார் அளித்திருக்க வேண்டும்.

புகாரை அமைச்சகம் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கும். இதனைத் தொடர்ந்து ஒப்பந்தத்தையோ அல்லது அதில் ஏதேனும் உரிமைகளையோ ரத்துச் செய்திருந்தால் தொழிலாளிக்கு இரண்டுமாத சம்பளமும் இதர சலுகைகளும்(other rights) இழப்பீடும்(Compensation) அளிக்க நீதிமன்றம் தொழில் உரிமையாளருக்கு இறுதி தீர்ப்பு வழங்கும்.

குறைந்தது இரண்டு வருடங்கள் தொழில் உரிமையாளரின் கீழ் வேலைச் செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தொழிலாளி நிறைவேற்றாவிட்டாலும் கூட புதிய தொழிலில் அனுமதி(Permit) கிடைப்பதற்கான மூன்று சூழ்நிலைகளை அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.

அவை:

1. வேலையில் சேரும்பொழுது தொழிலாளி தொழில்முறை வகுப்பில்(Professional Class) ஒன்று, இரண்டு, மூன்று(First, Second and Third) ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் உட்படுவார்.

புதியதாக சேரப்போகும் தொழிலில் வாக்குறுதியளிக்கப்படும் சம்பளம் ஒவ்வொரு பிரிவுக்கும் முறையே 12 ஆயிரம் திர்ஹம், 7 ஆயிரம் திர்ஹம், 5 ஆயிரம் திர்ஹம் ஆகியவற்றிலிருந்து குறைந்துவிடக் கூடாது.

2.தொழிலின் உரிமையாளர் சட்டரீதியான அல்லது தொழில் ரீதியிலான நிபந்தனைகளை கடைபிடிக்காமலிருந்தால் அல்லது தொழிலாளியை காரணமில்லாமல் வேலையிலிருந்து நீக்கினால்.

3.தொழில் உரிமையாளரின் இதர நிறுவனங்களிலோ அல்லது அவர் பங்குதாரராக இருக்கும் வேறு நிறுவனங்களிலோ தொழிலாளியை மாற்றுவது

இந்த மூன்று சூழ்நிலைகளில் தொழிலாளிக்கு நிச்சயிக்கப்பட்ட கால அவகாசம் பூர்த்தியாகமலேயே புதிய விசா கிடைக்கும்.

தொழில் சந்தையை(Labour market) மேலும் நெகிழ்வுத் தன்மையுடையதாக (Flexible) மாற்றுவதுதான் சட்டதிருத்தத்தின் மூலம் நோக்கமாக கொள்ளப்பட்டது என ஸகர் கோபாஷ் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் மற்றும் தொழில் உரிமையாளருக்குமிடையேயான ஒப்பந்தத்தில் சமத்துவம் ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இரு தரப்பினருடைய சட்டரீதியான உரிமைகளை பேணி பாதுகாப்பதற்கு உரிய பொறுப்பு தொழில் அமைச்சகத்திற்காகும்.

சட்டரீதியான நிபந்தனைகளில் முறைகேடுகள் நடந்தால் மட்டுமே தொழில் அமைச்சகம் தொழிலாளி மற்றும் தொழில் உரிமையாளருக்கிடையேயான ஒப்பந்தத்தில் தலையிடும்.

தொழில் சந்தையில் நிலவும் ஏராளமான முறைகேடுகளுக்கு இந்த புதிய சட்டம் பரிகாரமாக மாறும். வல்லுநர்களுடனான கலந்தாய்வுக்கு பின்னரே தற்போதைய சட்டங்களின் தொடர்ச்சியாக புதிய நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேசத்தின் முன்னேற்றத்திற்கு இவை உதவிகரமாக இருக்கும் என தொழில் அமைச்சர் ஸகர் கோபாஷ் தெரிவித்தார்.

Tuesday, December 21, 2010

இயற்கை பழச்சாறுகளின் மகத்துவம்..

தர்பூசணிப்பழச் சாறு:

கோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும்.நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்.

அத்திப்பழச்சாறு:

அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று பழமொழி இருந்தாலும் கூட அத்திப்பழத்தை உபயோகிக்கலாம். அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து அருந்தலாம்.இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரும்.அத்திப்பழமும் தேனும் கலந்து கல்உப்புடன் சேர்த்து உண்ண ஆரம்பகாலச் சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்..

ஆப்பிள் பழச்சாறு:

ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை
போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த
ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும்.மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி,உடற்பலம் பெருகும்.

திராட்சைச் சாறு:

திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு,நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்),காமாலை, வாயுகோளாறுகள்,மூட்டுவலி ஆகியவை குணமாகும். திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.

ஆரஞ்சுச் சாறு:


தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத
வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம்.
இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும். ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும். இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்தும் அருந்தலாம்.

எலுமிச்சைச் சாறு:

பாத்திரங்களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சை பயன்படுவதில்லை.நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் பயன்படுகிறது. எலுமிச்சைச் சாறு அத்துடன் தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும்.தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு,பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.இளநீருடன் கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும். வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்த எலுமிச்சைச் சாறுடன் அருந்துவதால் காலரா குணமாகும்.உடல் களைப்புகள், கை, கால் கனுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம்.பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சைச் சாறும் தேனும் கலுந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்கலாம்.

தக்காளிச் சாறு:

தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும்.நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும்.தோல் நோய்கள் குணமாகும்.
மேலும் தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு ஏற்ப பல விதமான
நோய்களை குணமாக்கும் ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகான சத்துடன்
விலை மலிவாக கிடைக்கும்.

Monday, December 20, 2010

தேசியவாதம் என்ற பெயரில் முஸ்லீ்ம்களை அழிக்க RSS,BJP துடிக்கிறது - திக்விஜய் சிங்



யூதர்களுக்கு எதிராக நாஜிக்கள் எப்படி செயல்பட்டனரோ, அதேபோல முஸ்லீம்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும், பாஜகவும் துவேஷத்துடன் செயல்படுகின்றன என்று மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.நேற்று நடந்த டெல்லி காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு திக்விஜய் சிங் பேசுகையில், நாஜிக்கள் எப்படி யூதர்களுக்கு எதிராக துவேஷத்துடன் செயல்பட்டனரோ அதேபோலத்தான் இப்போது ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை செயல்படுகின்றன.

இந்தியாவில் தீவிரவாதத்தின் வேர் பதியப்பட்டது 1992ல் அத்வானி நடத்திய ரத யாத்திரையின்போதுதான்.2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை குற்றம் சாட்டி வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தனது ஆட்சியில்தான் ரேடியோ அலை ஒதுக்கீட்டில் பெரும் ஊழலை செய்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன் தலைமையிலான துறைதான் இந்த ஊழலில் ஈடுபட்டது.

மேலும், மகாஜன் காலத்தில்தான் முதலில் வருவோருக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை என்ற நடைமுறையும் கொண்டு வரப்பட்டது. அதுவரை இருந்து வந்த ஏல முறையை நீக்கியவர் மகாஜன்தான்.

உ.பியில் முதல்வராக இருந்த இருவர் பெருமளவில் சொத்துக்களைக் குவித்துள்ளனர். இதுகுறித்து விரைவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட வேண்டும். (அவர்களது பெயரை திக்விஜய் சிங் குறிப்படிவில்லை. இருப்பினும் அவர் கூறியது மாயாவதி மற்றும் முலாயம் சிங் யாதவ் என்று கருதப்படுகிறது)

1930களில் ஹிட்லரின் நாஜிக் கட்சி யூதர்களை வெறித்தனமாக தாக்கியது. அதேபோல ஆர்எஸ்எஸின் கொள்கையும், முஸ்லீம்களைக் குறி வைத்தே உள்ளது. தேசியவாதம் என்ற பெயரில் முஸ்லீ்ம்களை அழிக்க ஆர்எஸ்எஸ் துடிக்கிறது.இந்தியாவில் தீவிரவாதத்தின் விதையை விதைத்தவர் அத்வானிதான். அவர் 1992ல் நடத்திய ரத யாத்திரைதான் தீவிரவாதத்தின் வேராகும்.

இந்திய வரலாற்றில் மிகப் பெரிய கரும்புள்ளியாக அமைந்துள்ளது பாபர் மசூதி இடிப்பு சம்பவம்.அனைத்து முஸ்லீம்களும் தீவிரவாதிகள் இல்லை ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லீம்கள் என்கிறார் அத்வானி. அவர் கூறுவது போலவே, அனைத்து இந்துக்களும் தீவிரவாதிகள் இல்லை, ஆனால் அனைத்து இந்துத் தீவிரவாதிகளும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் என்று நாம் சொல்லலாமா.

சிசு மந்திர் பள்ளிகளில் குழந்தைகளிடம் முஸ்லீம் துவேஷத்தை விதைத்து வருகிறது ஆர்எஸ்எஸ்.இது நாட்டுக்குப் பெரும் அபாயமாக உருவெடுத்துள்ளது.அதிகாரவர்க்கம், காவல்துறை,ஏன் ராணுவத்திலும் கூட ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஊடுறுவியுள்ளனர்.
ஆர்எஸ்எஸ்,பாஜகவின் வன்முறை மற்றும் துவேஷக் கொள்கைகள் நாட்டுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.அடுத்த பெரும் சவால்கள், கம்யூனிஸ்டுகளும், பிராந்திய அரசியல் தலைவர்களும் என்றார் திக்விஜய் சிங்.

Sunday, December 12, 2010

இவர்களை நினைத்து வேதனை படுவதா அல்லது சந்தோஷ படுவதா ??


ஆந்திராவை சேர்ந்த பெற்றோர் 12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகனை சென்னையில் கண்டுபிடித்து ஒன்று சேர்ந்தனர்.ஆந்திரா மாநிலம் ஐதராபாத் அருகில் உள்ள கிராமம் ஹாலம்பள்ளி. இந்த கிராமத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்பவர் ஷேக் குரான்(56). இவரது மனைவி சுபைதா பேகம்(40).

இவர்களது மகன் ஷேக் சபீர் 12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டான். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் ஷேக் சபீர்(19) சென்னையில் இருப்பதை தெரிந்து வியாழக்கிழமை சென்னை வந்தனர். 12 ஆண்டுக்கு பின்பு மகனை சந்தித்தும் பேச முடியவில்லை. காரணம் பெற்றோருக்கு உருது, தெலுங்கு மொழிகள் மட்டுமே தெரியும். சபீருக்கு தமிழ் மட்டுமே புரியும். பின்னர் மொழி தெரிந்தவர்கள் விளக்கம் சொன்னார்கள்.

பின்னர் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீஸ் டிஎஸ்பி முத்தமிழன், இன்ஸ்பெக்டர் மகேந்திரன் முன்னிலையில் மகனை ஒப்படைந்தனர்.இதுகுறித்து சபீர் கூறுகையில், ‘‘சின்ன வயதில் ஓடிவந்தது நன்றாக நினைவு இருக்கிறது. நண்பர்களுடன் ரயில் ஏறியதுதான் நினைவுக்கு வந்தது. பின்னர் ஒரு ஊரில் இறங்கினோம். கொஞ்ச நாட்கள் அங்கு இருந்தோம். நான் மட்டும் இன்னொரு ரயில் ஏறி 2000ம் ஆண்டு இங்கு வந்தேன். மற்றவர்கள் வரவில்லை. ரயில்வே போலீஸ் என்னை பிடித்து சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைத்தனர். அங்கு 9வது வரை படித்தேன்.

பின்னர் 2008ம ஆண்டு வெளியில் வந்து விட்டேன். கோயம்பேட்டில் வேலை செயும் போது உதவி இல்லத்தின் ஒருங்கிணைப்பாளர் முத்து அழைத்து சென்றார். அங்கு தங்கியபடி ஐயப்பா என்டர்பிரைசசில் தோல் தொழில் பயிற்சி பெற்றேன். பின்னர் அங்கு வேலை செய்த மேற்பார்வையாளர் சுரேஷ், அவர்களது நண்பர்கள் பாமக பிரமுகர் ஆனந்த், அதிமுக பிரமுகர் வெங்கடேசன், அரிமா சங்கத்தினர் எனது பெற்றோரை கண்டுபிடித்தனர். என் பெற்றோர் கிடைக்க வேண்டும் என்று ஐயப்பனுக்கு மாலை போட்டேன். இன்று ஊருக்கு போகிறேன். 17ம் தேதி மொகரம் முடிந்ததும் சென்னை வருவேன். சபரிமலைக்கு 20ம்தேதி போகிறேன்’’ என்றார்.

சேஷக் குரான், சுபைதா பேகம் கூறுகையில், ‘‘எங்களுக்கு சபீர் 4வது பையன். அவனுக்கு 2 அண்ணன், ஒரு அக்கா, ஒரு தங்கை இருக்கிறார்கள். அல்லாவின் அருளாலும், நல்லவர்கள் உதவியாலும் எங்கள் பையன் கிடைத்து விட்டான். அவன் சபரிமலைக்கு மாலை போட்டுள்ளது குறித்து எங்களுக்கு வெறுப்போ, வருத்தமோ இல்லை. அது அவன் விருப்பம். இப்போது அவன் கிடைத்த மகிழ்ச்சியே போதும். சபீர் இங்கேயே வேலை செய்யப் போகிறானாம். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை எங்களை பார்க்க வருவானாம். எல்லா பிள்ளைகளுக்கும் கல்யாணம் செய்து விட்டோம். ஆனால் இவன் 2 ஆண்டாவது எங்களுடன் முழுமையாக இருந்த பிறகுதான் கல்யாணம்’’ என்றனர்.

இவர்களை நினைத்து வேதனை படுவதா அல்லது சந்தோஷ படுவதா ??

Saturday, December 11, 2010

முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் கொச்சைபடுத்தும் தி.மு.க. அரசு – தமுமுக கடும் கண்டனம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் கண்டன அறிக்கை:

தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக காவல்துறையினருக்கு அளிக்கப்படும் பயிற்சி செயல்பாட்டில் தீவிரவாதிகளை இஸ்லாமிய அடையாளங்களுடன் காட்டி தி.மு.க. அரசின் காவல்துறைக் கொச்சைப்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில், தீவிரவாதிகளை வேட்டையாடுவதாக நேற்று (09.12.10) போலீசார் நடத்திய பயிற்சி செயல்பாட்டில் போலி தீவிரவாதிகளைத் காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்த செய்தி பத்திரிகைகளில் படத்துடன் வெளிவந்துள்ளது.

போலியாகப் போலீசார் உருவாக்கிய தீவிரவாதிகளுக்கு இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட நபிவழியான தாடியை வேண்டுமென்றே ஒட்ட வைத்து இஸ்லாமிய அடையாளங்களுடன் அவர்களை சித்திரித்திருப்பது முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டும், பாசிச சக்திகளின் திட்டத்தை தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு நிறைவேற்றுவதாகவே அமைகிறது.

சீக்கியர்களுக்கு டர்பனும், பிராமணர்களுக்குப் பூணூலும், கிறிஸ்தவர்களுக்கு சிலுவையும், பெரியார் இயக்கத்தினருக்குக் கருஞ்சட்டையும் அடையாளங்களாக இருப்பதுபோல முஸ்லிம் ஆண்களுக்குத் தாடி ஒரு மார்க்க அடையாளமாகும். அதை கொச்சைப்படுத்தும் வகையில் தீவிரவாதிகள் எல்லோரும் தாடிகளோடு இருப்பது போல, ஓட்டுத்தாடியை வைக்க செய்து பத்திரிகைகளில் பிரசுரிப்பது முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும்.

உண்மைக் குற்றவாளிகளை மத அடையாளங்களோடும், மதத்தோடும் சம்பந்தப்படுத்துவதே சமூக நல்லிணக்கத்தற்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். போலித் தீவிரவாதிகளுக்கு, இஸ்லாம் மார்க்க அடையாளங்களை காட்டுவது தமிழகத்தில் நிலவிவரும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் செயல் என்பதில் அய்யமில்லை. காவல்துறையைத் தன் கையில் வைத்துள்ள முதல்வர் கலைஞருக்கு சமூக நல்லிணக்க நாயகன் விருதை முஸ்லிம் லீக் கட்சி தான் நடத்தும் மாநாட்டில் கொடுப்பதாக அறிவித்துள்ளது. முஸ்லிம்களைத் தீவரவாதிகளாகக் காட்டுவது தான் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் செயலா?

தமிழக அரசின் காவல்துறை முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டியுள்ளதற்கு தமுமுக வன்மையானக் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. உடனடியாக தமிழக அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.

Wednesday, December 8, 2010

PJ -யின் இரட்டை முகம்...!!!


பிஜேக்கு ஒரு பாமரனின் பதில்கள்.- ஜாஹிர் ஹுஸைன்.
- சோனாப்பூர் அஜ்மல்

அன்புள்ள இஸ்லாமிய மார்க்க சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்!)

நான் இக்குழுமத்தில் உறுப்பினராக இல்லை. ஆனால், பல குழுமங்களில் ஃபார்வார்டு செய்யப்படுவதால் என் மெயில் ஐடிக்கும் ஃபார்வர்டு செய்யப்பட்டு எனக்கும் தொடர்ந்து மெயில்கள் வர ஆரம்பித்துள்ளது. நானும் நல்ல விஷயங்கள் உள்ளதால் செலக்டிவாக மெயில்களைப் படிப்பது உண்டு.

ஆனால், தற்பொழுது சில காலமாக வரும் மெயில்களின் பொருள் படித்து மிகுந்த மனவேதனைக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாகி உள்ளேன். ஆம், இது அபுசுமையா - பீஜே இடையிலான கருத்து பரிமாற்றம் - (வீண்) விவாதம்.

சிறு வயது முதல் தௌஹீது சிந்தனையில் வளர்ந்த நான் இன்று தௌஹீது என்று தம்மை பறைசாற்றுவோரைக் கண்டால் 10 அடி தள்ளி நிற்கிறேன்.காரணம், அவர்களின் சொல் - செயல் - நடத்தையால்.

பீஜே மதுரை அவனியாபுரத்தில் அல்ஜன்னத் ஆஃபீஸ் என பிரிண்டிங் பிரஸ் வைத்துக் கொண்டிருந்த காலம்முதல் அவரை நான் அறிவேன். பீஜேயின் மார்க்க ஆசிரியர் மௌலவி கலீல் அஹ்மது கீரனூரியின் பல உரைகளை நேரில் கேட்டிருந்த நான் பீஜேயின் “கேள்வி கேளுங்கள் - சந்தேகத்தைப் போக்கி கொள்ளுங்கள்” என்ற பாணி என்னை மிகவும் கவர்ந்தது. அது பரிணாம வளர்ச்சி பெற்று “” இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்” என்ற பல்சமய சகோதரர்கள் நிகழ்ச்சியில் “”உங்களுக்கு இஸ்லாம் பற்றிய எந்த கேள்வியானாலும் - சந்தேகமானாலும் தயங்காமல் கேளுங்கள். நாங்கள் தவறுதலாக நினைக்க மாட்டோம். எவ்வளவு கடுமையாக உணர்ச்சிகளைக் கொட்டி திட்டி கேட்க வேண்டுமா? கேளுங்கள்! நாங்கள் கோபப்பட மாட்டோம். சிரித்துக் கொண்டே பதில் சொல்வோம்” என அறிவிப்பு செய்து இஸ்லாம் அல்லாதவரையே கேள்வி கேட்க சொன்ன பீஜே இன்று ?

அபுசுமையா கேட்கும் கேள்விகளுக்கும் அவ்வாறே புன்னகைத்துக் கொண்டே பதில் சொல்ல வேண்டியது தானே? அதை விடுத்து அபுசுமையாவை (இந்த சகோதரர் யாராக வேண்டுமானால் இருக்கட்டும்) மூன்றாம் தர எழுத்துக்களால் திட்டி தீர்ப்பது தான் முறையா? இது தான் நபி வழியா?

கேள்வி கேட்பவரின் பின்னணி, அவர் யார் என்ற முழு விபரம் தெரிந்தால்தான்; பதில் சொல்வீர்களா? அப்படியென்றால் ஜவாஹிருல்லா – ஹைதர் அலி - பாக்கரோடு கை கோர்த்து இருந்த கால கட்டத்தில் விண் டி.வி.யில் Live டெலிபோன் காலில் வரும் கேள்விகளுக்கு எப்படி பதில் சொன்னீர்கள்? அந்த காலில் வரும் நபரின் பெயர், ஊர், எண், உண்மையானது தான் என எப்படி உறுதிப்படுத்தினீர்கள்? டெலிபோன் பில்லை அவர்கள் உங்களுக்கு அனுப்பி, அதைப் பார்த்து சரி கண்ட பின் பதில் கூறினீர்களா?

பீஜே அவர்களே ப்ளீஸ் வேண்டாம். அல்லாஹ் நம் அனைவரையும் கண்காணித்துக் கொண்டு உள்ளான் என்பதை உங்களுக்கு ஞாபகமூட்டுகிறேன்.அபுசுமையாவின் கேள்விகளுக்கு ஒன்று பதில் கூறுங்கள் அல்லது பதில் கூற என்னால் முடியவில்லை என அபுசுமையாவை உதறி தள்ளிவிடுங்கள். அதை விடுத்து அவருடைய ஈமானை, பிறப்பை, ஒழுக்கத்தை குறித்து விமர்சிக்க வேண்டாம்.

பலர் நல்ல முறையில் உங்களுக்கு சுட்டிக் காட்டியும் இறைவனுக்கு அஞ்சாமல், மறுமைத் தண்டனைகளுக்கு பயப்படாமல் மென்மேலும் அநியாயம் இழைக்கிறீர்கள். உங்களுடைய இணைய தளத்தில் அபுசுமையா மீது நீங்கள் கூறிய உங்களுடைய அவதூறு இழிச்சொற்களுக்கு நீங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது அல்லாஹ்விடம் முறையிடுவேன் என்று எழுதிய பின்பும் மன்னிப்பு அல்ல குறைந்த பட்சம் நீங்கள் எழுதியதை வாபஸ் வாங்க கூட நீங்கள் தயாரில்லை? பி.ஜே. அவர்களே என்னவாயிற்று உங்களுக்கு? ஷைத்தான் உங்கள் கண்களை - சிந்தனையை மழுங்கடித்து விட்டானா? இஸ்லாத்தையும், சக சகோதரனின் கண்ணியத்தையும் பலர் முன்னிலையில் காலில் போட்டு மிதித்து விட்ட உங்களின் ஈகோ, மறுமையில் முன் வந்து பரிந்துரைக்குமா?

தக்வா என்ற தலைப்பில் நீங்கள் 1995–96ல் பேசிய இரண்டு ஆடியோ கேசட்டுகள் உள்ளன. நீங்கள் ஒருமுறை அவற்றை கேட்டுப் பாருங்கள். உங்கள் தவறுகள் உங்களுக்கு விளங்கும்.

இந்த (வீண்) விவாதத்தின் உச்சகட்டமாக இந்தக் கள்ளப் பேர்வழி மீது உள்ள வழக்கு என்ன? ஏன் தலை மறைவாக வேண்டும்? குற்றப் புலனாய்வுத்துறையின் தேடுதல் பட்டியலில் கள்ளப் பேர்வழியின்பெயர்இருப்பது ஏன்? கள்ளப் பேர்வழியின் ஒரிஜினல் பெயர் என்ன? இப்பொது ஒளீந்து கொண்டிருப்பது எந்தப் பெயரில்? அனைத்தையும் போட்டுக் கொடுக்கட்டுமா என்றெல்லாம் பீஜே கேட்டுக் கொண்டிருக்க மாட்டார். எப்போது எங்கே எப்படி தெரிவிக்க வேண்டும் என்று அவர் விரும்பும் போது உரிய நேரத்தில் உரிய வகையில் செய்ய வேண்டியதை பீஜே செய்வார். இப்படி எழுதியுள்ளீர்கள்.

இதைப் படித்தவுடன் என் மனம் பட்ட வேதனைக்கு அளவில்லை. அபுசுமையாவின் பெயர் குற்றப் புலனாய்வுத்துறையினரின் தேடுதல் பட்டியலில் இருப்பது (அல்லாஹ் ஆலம்) (இது உண்மையா என்பது விவாதத்துக்குரியது. ஒரு பேச்சுக்கு உண்மையென்றால் கூட) பீஜேக்கு எப்படி தெரியும்? இவர் எப்பொழுது குற்றப்புலனாய்வுத்துறையில் வேலைக்கு சேர்ந்தார்? அல்லது அவர்களுடைய இரகசிய உளவாளியா (Police Informer )? அல்லாஹ்வே அறிவான்.

மேலும் அனைத்தையும் போட்டுக் கொடுக்கட்டுமா? எப்போது, எங்கே, எப்படி தெரிவிக்க வேண்டும் என்பதை உரிய நேரத்தில் உரிய வகையில் செய்வேன் (என கேட்க மாட்டோம் என்று சொல்லி மிரட்டி) என பீஜே கூறியுள்ளது, அவரே தன் வாயால் ” பீஜே போலீஸில் போட்டு கொடுப்பவர் - ஆள்காட்டி” என்று பலரும், பலவகையில், பல்வேறு நேரங்களில் அவரைப்பற்றி கூறியதை ஒத்துக் கொண்டுள்ளதாகத் தான் அறிய முடிகிறது. ஆம், பீஜேயின் சுய வாக்குமூலம் இது.

பல்வேறு சமயங்களில், பல்வேறு நபர்களால் பீஜே மீது கூறப்பட்ட இந்த“”ஆள் காட்டி” குற்றச்சாட்டு பட்டியல் இமாம் அலி, சீனி நைனா முஹம்மது, ஹாமித் பக்ரி, ஜாகீர் ஹஸைன், மொய்தின் பக்ரி, முகைதின் உலவி என்று நீளுகிறது.

குண்டு வைப்பதையே தொழிலாகக் கொண்டுள்ள RSS - சங்பரிவார் கும்பலை என்றைக்காவது பீஜே போலீஸில் காட்டி கொடுத்துள்ளாரா? குஜராத், மும்பை சம்பவங்களில் அம்ரேஸ் மிஸ்ரா போன்றோர் கண்டுபிடித்தவற்றை பயன்படுத்தி பீஜே RSS மீது எடுத்த நடவடிக்கை என்ன? சரி அவற்றை விடுங்கள். குறைந்தபட்சம், தமிழகத்தில் தென்காசி RSS அலுவலக குண்டு வெடிப்பு வழக்கு RSS தான் குண்டு வைத்தது என நிரூபணமானதால் வழக்கை கிடப்பில் போட்ட தமிழக அரசு மீது பீஜே என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?

பாவம் பதில் சொல்வீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களிடம் கேள்வி கேட்ட ஒருவனர போட்டுக் கொடுக்க உங்களால் முடியும் என்றால் "சமுதாயத் துரோகி" என்ற சொல் நினைவுக்கு வருகிறது. உங்களை நம்பியிருக்கும் மக்களை நினைத்து மனம் பதறுகிறது.

யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்போம் என சூளுரைக்கும் ததஜ தொண்டர்கள் குறிப்பாக அபுநூறா, அதிரை ஃபாரூக், ஹாமீன் இப்ராஹீம், மஸுது, போன்றோர் பீஜே கூறியுள்ளது தவறு என ஏன் பகிரங்கமாக இக்குழுமத்தில் எழுதத் துணியவில்லை?

ஏன் எனில் இதுதான் தக்லீத் என்பது. யார் என அடையாளம் தெரியாமலேயே எந்த ஒரு ஆதாரமும் இன்றி அபுசுமையாவை அவன், இவன், என ஒருமையிலும், ஈமான், பிறப்பு, ஒழுக்கம் குறித்து பீஜே ஒரு முஸ்லிம் என்றும் பாராமல்;;;;;;;; கேவலமாக திட்டி எழுதுவதும் தவறில்லையா ததஜ சகோதரர்களே? அல்லாஹ்விற்காக ஒரே ஒரு நிமிடம் இயக்க சூழலை விட்டு நீங்கி யோசித்துப் பாருங்கள். பாதிக்கப் பட்ட சகோதரின் மன அமைதிக்கும், அநியாயம் செய்தவருக்காகவும் தொழுகையில் துஆ கேட்பவர்கள் பட்டியலில் இணைவீர்கள்.

முஸ்லிம் சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது. தலைவர்கள் எப்படி வழிகெடுத்து கொண்டுள்ளனர்? சமுதாயத்தின் நேரம், பொருள், சக்தி, எப்படி வீண் விரயம் ஆகிக் கொண்டிருக்கிறது?

RSS - சங்பரிவார் கும்பல் திட்டம் தீட்டி சதி செய்து அவர்கள் வைத்த குண்டுகளை முஸ்லிம்கள் வைத்ததாக பழி சுமத்தி முஸ்லிம் சமுதாயத்தை குற்றப் பரம்பரையாக சித்தரித்து கொண்டு உள்ளனர். இதை எதிர்த்து இச்சதியை முறியடிக்க வேண்டிய முஸ்லிம் இயக்கங்கள் (ததஜ போன்ற), அதன் தலைவர்கள் (பீஜே போன்றோர்) இச்சமுதாயப் பணியில் ஈடுபடாமல் சொந்த சகோதரர்களுக்கு எதிராக பத்திரிக்கை இணையதளத்தில்; எழுதியும், டிவி, பொதுக்கூட்டத்தில் பேசியும் இஸ்லாமிய அழைப்பு பணிக்கு பயன்படுத்த வேண்டிய மீடியா சாதனங்களை வீணடித்து வருகின்றனர்.

நம்முடைய எதிரி யார் என்று தெரியாமல் (நிச்சயம் தலைவர்கள் அறிவர். மக்களை தான் முட்டாளாக்குகின்றனர்.) நமக்குள்ளே சண்டையிட்டு கொள்வதோடு மட்டுமல்லாமல், நம்முடைய கவனம் உண்மையான எதிரிகளின் மேல் செல்லாது தடுத்து விடுகின்றனர்.

பீஜேயின் சொல்லும், செயலும் வெவ்வேறானவை எனப் பல்வேறு வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு சின்ன சாம்பிள், தொப்பி போடக்கூடாது என கடுமையாக எதிர்த்த பீஜேயினால் தொழுகை நேரத்தில் சண்டை மூண்ட பள்ளிவாயில்கள் எத்தனை? ஆனால், இன்று அதே பீஜே தொப்பியில்லாமல் வெளியே வருவதில்லை. இதை சுட்டிக்காட்டினால், தொழுகையில் தொப்பி அணிந்தால் நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை தவறானது என நிரூபிக்க அவ்வாறு கூறினேன். நான் ஒன்றும் தொழுகையில் அணிவதில்லையே என தன் வாதத்திறமையால் சமாளிக்கிறார். மக்கள் மறதியாளர்கள் என்பதை அவர் உணர்ந்துள்ளதால் இவ்வாறு கூறுகிறார். ஆனால் ஞாபகசக்தி வலிமை உள்ள மனிதர்களுக்கு ”தொப்பி அணிவது யூதர்களின் அடையாளம் - வழக்கம்” என இதே பீஜே கூறியது மறந்திருக்காது.

மற்றொரு உதாரணம், பிரிந்து கிடக்கும் தௌஹீது இயக்கங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சில சகோதரர்கள் முயற்சி எடுத்து 2003ல் நெல்லை ஏர்வாடியில் “”தௌஹீது ஒற்றுமை மாநாடு” ஒன்றை ஏற்பாடு செய்தனர். அனைவரையும் அழைத்தனர். பீஜேயை தவிர மற்ற அனைவரும் அபு அப்துல்லாஹ், JAQH கமாலுதீன் மதனீ, டாக்டர் முஹம்மது அலி, ஹாமித் பக்ரி, உட்பட பலர் கலந்து கொண்டனர். பீஜே யையும் எப்படியாவது கலந்து கொள்ள வைக்க வேண்டும் - அதன் மூலம் ஒற்றுமை ஏற்படட்டும் என்று சில சகோதரர்கள் பீஜேயை அணுகிய போது “”கொள்கை வெவ்வேறான இருவர் எப்படி ஒரே மேடையில் அமர்ந்து பேசுவது? “”இயக்கம் கூடாது” என்று கூறும் அபு அப்துல்லாவும், “”இயக்கம் கூடும்” என்று சொல்லும் நானும் எவ்வாறு ஒரே மேடையில் அமர்ந்து பேசுவது?” எனக் கேட்டு ஒற்றுமை ஏற்படவிருந்த அருமையான வாய்ப்பை அன்றிலிருந்தே காலில் போட்டு மிதித்தவர் தான் இந்த பீஜே.

“”இயக்கம் கூடுமா? கூடாதா?” என்பது ஒன்றும் தௌஹீது அல்லது இஸ்லாமிய கொள்கைக்கு முரண்பாடானது அல்ல. ஆனால், ஏகத்துவத்துக்கு எதிரான பலதெய்வ சிலை வணங்கிகளான மூப்பனார், வரதராஜன், தா. பாண்டியன், ராமதாஸ், போன்ற பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களோடு வாழ்வுரிமை மாநாடு என்ற பெயரில் அமர்ந்து பேசியது மட்டும் வெவ்வேறான முரண்பாடான கொள்கை இல்லையா? நடுநிலையாளர்கள் - அதாவது அல்லாஹ்விற்கு பயந்தவர்கள் இந்த இரண்டு சிறிய உதாரணங்களைக் கொண்டு பீஜே எப்படிப்பட்ட முரண்பாடுகள் உடைய சந்தர்ப்பவாதி என உணர்வார்கள்.

பீஜேயிடம் தௌஹீது பிரச்சாரத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்த ஹக் - உண்மை, நேர்மை, வாய்மை இன்று இல்லை. அதனால், தான் இன்று அவரால் எங்கு சென்றாலும் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அவரை பலரும் நான் உட்பட வளைகுடா நாடுகளுக்கு தௌஹீது பிரச்சாரம் செய்ய அழைத்த போது “”நான் எந்தவொரு வெளிநாடுக்கும் செல்லக் கூடாது” என்ற கொள்கையை (எந்த குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்தில் இதை கூறினார் என்று அபுசுமையா கேட்பது காதில் விழுகிறது) வைத்துள்ளேன் என கூறிய பீஜே அந்நஜ்ஜாத், அல்முபீன், அல் ஜன்னத், ஒற்றுமை என பத்திரிக்கைகளிருந்தும் ஜாக், தமுமுக, தவ்ஹீத் ஜமாத் என இயக்கங்களிருந்தும் வெளியேறி தனக்கென உணர்வு, ஏகத்துவம் என்ற பத்திரிக்கைகளையும், ததஜ என்ற இயக்கத்ததையும் ஆரம்பித்த பிஜே இவற்றிற்கு ஆதரவு திரட்ட வேண்டி தன் வெளிநாட்டு கொள்கையை மாற்றிக் கொண்டு 2004ல் துபாய்க்கு வர அங்கு பேச அனுமதி மறுக்கப்படுகிறது. ததஜ சகோதரர்களே... தயவு செய்து சிந்தியுங்கள்!

இறுதியாக, சில பழைய சம்பவங்களை நினைவூட்ட விரும்புகிறேன்.


மதுரையிலிருந்து பீஜேயை சென்னைக்கு கிளப்பி செல்ல அழைத்து பாக்கர் வரும்பொழுது சில சமயம் அவர் வரும் தகவல் கிடைத்து, பீஜே மாடியில் இருந்து கொண்டு வெளியில் சென்று விட்டதாகக் கூறச் சொல்ல பேராசிரியர் நதீம் ரசூலுல்லாஹ் பொய் சொல்ல அனுமதித்த 3 காரணங்களில் இது வரவில்லையே என வாதிட்டது நினைவுக்கு வருகிறது.

மேலும், பீஜே என நினைத்து அப்பாவி யூஸுப் மிஸ்பாகியை எந்த குற்றச்சாட்டுக்காக சிலர் அடித்தனர் என்ற சம்பவத்தையும் பீஜேக்கு இங்கு நினைவூட்டுகிறேன்.

80களில் மதுரையில் தமுக்கம் மைதானத்தில் திருக்குர்ஆன் மாநாடு நடத்த ஏற்பாடுகள் எல்லாம் செய்திருந்த பொழுது கலீல் அஹ்மது கீரனூரியின் தலையீட்டால் அது தடைசெய்யப்பட்டு ஒரு கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. அக்கால கட்டத்தில் மதுரையில் பீஜேயின் உரைகளைக் கேட்டு விட்டு கலீல் அஹ்மது கீரனூரியிடம் நேரில் சென்று விளக்கம் கேட்பேன். தராவீஹ் இரவுத் தொழுகை 8ஆ 20ஆ எனக் கேட்டபொழுது கீரனூரி நபி (ஸல்) 8ரக்அத் தான் தொழுதார்கள். ஆனால், உமர் (ரலி) 20ரக்அத் தொழுதுள்ளார்கள் அதற்கு சரியான ஆதாரம் உள்ளது என்றார். நான் உடனே தயவு செய்து 20க்கு ஆதாரம் உள்ளதாக கூறும் நீங்கள் அதை பீஜேக்கு கூறி நிரூபித்தால் எம்மை போன்றோர் குழப்பத்திலிருந்து மீள வழிபிறக்குமே எனக் கோரிக்கை வைத்தேன். அதற்கு கீரனூரி “”கிங்காங்கை ஒரு 5 வயது பொடியன் குஸ்திக்கு அழைத்து அறைகூவல் விடுத்தால், எப்படி போவான்?” என்றார். அதாவது, தன்னை கிங்காங் எனவும் பீஜே போன்ற தௌஹீதுவாதிகள் பொடியன் எனவும் கூறினார்.

இதை பீஜேயிடம் கூறியபொழுது கீரனூரியின் அகங்காரம் - ஆணவம் உங்களுக்கு புரியவில்லையா என்றார். அப்போது உடனிருந்தவர் மறைந்த பேராசிரியர் ஜமாலுதீன். அவர் மாநாடு தடைசெய்து பின் மண்டபத்தில் நடந்ததை வைத்து அல் ஜன்னத்தில் “கிங்காங்கும் ஒராயிரம் பொடியன்களும்” என்ற கட்டுரையை எழுதி கீரனூரியின் ஆணவம் - கிப்ர்ஐ கடுமையாக விமர்சித்து எழுதினார்.

தன் ஆசிரியர் கலீல் அஹ்மது கீரனூரியையே மிஞ்சி இன்று பீஜே ஆணவத்தின் உச்ச கட்டத்தில் உள்ளார். நான் எந்த ஒரு இயக்கத்திலும் உறுப்பினராக இல்லை. எந்த ஒரு இயக்கம் சார்பிலும் இதை எழுதவில்லை. நம் கொள்கை சகோதரர் யாரேனும் வழி தவறி நடக்கும் போது அவருடைய தவறை சுட்டிகாட்டி திருத்த முயற்சி செய்வது நம் கடமையல்லவா? அதன் அடிப்படையில் தான் இந்த கடிதத்தை எழுதி உள்ளேன். சகோ. பீஜே என் நல்ல நோக்கத்தை புரிந்து கொள்வார் என நம்புகிறேன். தவறை சுட்டிக் காட்டிய ஒரே காரணத்திற்காக என் மீதும் அவதூறுகளை இட்டுக் கட்டி மேன்மேலும் பாவமூட்டையை முதுகில் சுமக்க வேண்டாம்.

சகோதரர் பீ.ஜே அவரை ஆட்டுவிக்கும் இந்த இயக்க வெறி - சுயநலக் கும்பல்களை விட்டு ஒதுங்கி ஒரு வாரம் தனிமையில் தன் குடும்பத்துடன் மட்டும் தங்கி வேறு எந்த நபரையும் சந்திக்காது தன்னை தானே சுய பரிசோதனை செய்து தன் சொல் - செயல் - நடத்தை குர்ஆன் - ஹதீஸ் ஒளியில் உள்ளதா என ஆராய்ந்து பார்த்தாரானால் நிச்சயம் அது அவருடைய மறுமை வாழ்வின் வெற்றிக்கு உதவும். இதை அவர் செய்ய அவருக்கு நேரம் சூழல்களை அமைத்துத் தர எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் துஆ செய்கிறேன்!

---------------
-ஜாஹிர் ஹுஸைன். (zahirdgl85@yahoo.co.in)

Friday, December 3, 2010

இணையதளம் முடக்கம்-புதிய முகவரிக்கு மாறிய விக்கிலீக்ஸ்


உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் தங்கள் அரசுக்கு அனுப்பிய ரகசிய தகவல்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் வெப்சைட் முடக்கப்பட்டுள்ளது.

அதன் www.wikileaks.com மற்றும் www.wikileaks.org ஆகிய இணைய தள முகவரிகளை அமெரிக்காவின் சிஐஏ நடவடிக்கை எடுத்து முடக்கிவிட்டது.

இதை முன்பே எதிர்பார்த்த விக்கிலீக்ஸ், அடுத்த சில மணி நேரங்களில் www.wikileaks.ch என்ற புதிய இணையதள முகவரியில் இயங்கத் தொடங்கிவிட்டது.

இதை டிவிட்டர் மூலம் உலகெங்கும் உள்ள தனது ரசிகர்களுக்கு வீக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
எங்கள் நிலையில் நாங்கள் உறுதியாக இருந்து,உண்மைகளை மட்டுமே வெளியிட்டுள்ளோம், இதனால் யாருக்கும் பயப்படப் போவ‌தில்லை. எங்கள் சேவை மேலும் தொடரும். அதற்கு நன்கொடையாளர்கள் ‌‌‌தேவை என்றும் விக்கிலீ்க் தெரிவித்துள்ளது.

உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் வாஷிங்டனில் உள்ள வெளியுறவுத்துறையின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிய சுமார் இரண்டரை லட்சம் ரகசிய கேபிள் தகவல்களை கடந்த ஒரு வாரமாக விக்கிலீக்ஸ் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.