மக்கள் உரிமை படியுங்கள்

Thursday, May 6, 2010

கவிதை : நீயும் நானும் ஒன்று !!


அடுத்த வேலை உணவிற்கு அலையும்
ஏழைகளின் நிலை கண்டு
அவர்கள் வயிற்றில் எரியும் நெருப்பு
உன் இதயத்தில் எரிந்தால்...
நீயும் நானும் ஒன்று!

தமிழனாய் இருந்துக்கொண்டு தாய்மொழியை மதிக்காதவர்களையும்
இன உணர்வு இல்லாதவர்களையும் கண்டு
உன் உள்ளம் கொந்தளித்தால்...
நீயும் நானும் ஒன்று!

சதையை நம்பியும் முட்டாள் ரசிகர்களை நம்பியும்
எடுக்கப்படும் படங்களைக் கண்டு
உன்னால் குமுற முடிந்தால்..
நீயும் நானும் ஒன்று!

இந்திய மக்களை மேலும் மேலும் மூடர்களாக்கி
அந்த மூடத்தனத்தையே மூலதனமாக்கி சம்பாதிக்கும் அரசியல்வாதிகளையும்
அந்நிய நாட்டு நிறுவனங்களையும்
உள்நாட்டு தொலைக்காட்சிகளையும்
விளம்பரங்கங்களையும்
கண்டு உன்னால் கொதிக்க முடிந்தால்
நீயும் நானும் ஒன்று!

வாழ்க்கையில் ஏதேனும் சில சந்தர்ப்பங்களில்
நேர்மைத் தவறி நடக்கும் நிலை வரும்போதெல்லாம்
உன்னால் வேதனைப்பட முடிந்தால்
நீயும் நானும் ஒன்று!

குமுறினாலும் கொதித்தாலும்
கொந்தளித்தாலும் வேதனைப்பட்டாலும்
கையாலாகாத்தனத்தோடு
நீ உன் வழியே நடந்தால்
நீயும் நானும் ஒன்று! :)

எங்கள் மீது பாயும் அமெரிக்கா இஸ்ரேலை கண்டிக்காதது ஏன்? – ஈரான் அதிபர் பாய்ச்சல்


ஐ.நா : எங்கள் மீது பாயும் அமெரிக்கா அணு ஆயுதங்களைக் குவித்துக் கொண்டிருக்கும் இஸ்ரேல் நாட்டைக் கண்டிக்காதது ஏன் என்று ஈரான் அதிபர் அகமதி நிஜாத் கேட்டுள்ளார்.

ஐ.நா. சார்பில் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் தொடர்பான மாநாடு கூட்டப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு பேசிய ஈரான் அதிபருக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர்.ஹில்லாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.

அகமதிநிஜாத் பேசுகையில், முதன் முதலில் அணுகுண்டை உருவாக்கி அதை பயன்படுத்தியது அமெரிக்காதான். இன்றும் கூட அது பெருமளவில் அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ளது. அணு ஆயுதப் பரவலை உருவாக்கியதே அமெரிக்காதான். ஆனால் மற்ற நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்று மிரட்டி வருகிறது.

ஈரான் அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறி வரும் அமெரிக்கா, இஸ்ரேல் மீது கவனம் செலுத்தாதது ஏன். இஸ்ரேல் அணு ஆயுதங்களைக் குவித்து வருவதை கண்டிக்காதது ஏன்.பிற நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களை வைத்து மிரட்டுவதோடு, பயன்படுத்தவும் தயங்காத அமெரிக்கா, தொடர்ந்து ஈரானை மட்டும் சாடி வருவது வருத்தத்திற்குரியது என்றார்.

பின்னர் பேசிய ஹில்லாரி கிளிண்டன், அகமதிநிஜாத்தின் பேச்சு எதிர்பார்த்த ஒன்றுதான், வியப்பளிப்பதாக இல்லை என்றார்.

முஸ்லீம்களின் சுதந்திரத்தை பறித்தவர்கள் விடுதலைப் புலிகள் - இலங்கை அதிபர்.ராஜபக்சே


கொழும்பு: யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்களில் பிற சமூகத்தினருடன் சுமூகமான முறையில் வாழ்ந்து வந்த முஸ்லீ்ம்கள விரட்டியடித்து அவர்களின் சுதந்திரத்தைப் பறித்தவர்கள் விடுதலைப் புலிகள் என்று கூறியுள்ளார் இலங்கை அதிபர்.ராஜபக்சே.

கொழும்பில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் முஸ்லீம் பெண்களிடையே இன்று ராஜபக்சே பேசினார்.அப்போது அவர் கூறுகையில்,90களில் இந்த மூன்று மாவட்டங்களிலும் முஸ்லீகளை விரட்டியடிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர் விடுதலைப் புலிகள்.

முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் பிற சமூகத்தினருடன் இணக்கமாக வாழ்ந்து வந்த முஸ்லீம்களுக்கும், பிற சமூகத்தினருக்கும் இடையிலான ஒற்றுமையை, நல்லிணக்கத்தை சீர்குலைத்தவர்கள் புலிகள்.

அங்கிருந்து விரட்டப்பட்ட முஸ்லீம்கள் அகதிகளாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள முகாம்களில் தற்போது வாழ்ந்து வருகின்ரனர். இவர்களை சொந்த ஊர்களுக்கு மீள் குடியேற்றும் செய்யும் நடவடிக்கைள் விரைவில் தொடங்கும்.

இலங்கையில் அனைத்து சமூகத்தினருக்கும் இடையிலான உறவு வலுவாகவே உள்ளது. வடக்கு மாகாணத்திற்கு வடக்கில் வசந்தம் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம் என்றார் ராஜபக்சே.

புதுசு புதுசா உணவில் இப்படியும் கலப்படம்...!!

உணவில் எப்படியெல்லாம் கலப்படம் செய்யலாம் என சிலர் 'ரூம் போட்டு யோசிப்பார்கள்' போல் இருக்கிறது. விலைவாசி உயர்வால்,செலவைக் குறைப்பதற்காக விதம் வித மாய் கலப்பட உத்திகளை மதுரையில் கண்டுபிடித்துள்ளனர்.முன்பெல்லாம் அரிசியில் கல்லை கலப்பது,பாலில் தண்ணீரை கலப்பது,ஆட்டிறைச்சியில் மாட்டிறைச்சியை கலப்பது தான் அதிகபட்ச கலப்படமாக இருந்தது.இப்போது நினைத்து பார்க்க முடியாத வகையில் கலப்படங்கள் நடக்கின்றன.

அவற்றின் பட்டியல் இதோ:

* பாலில் ஜவ்வரிசியை துணியில் கட்டி போட்டு விடுவர்.இப்போது கெட்டியான பால் ரெடி.

* டீத்தூளில் முந்திரி தோல், புளியங்கொட்டை தோல், மஞ்சணத்தி இலைகளை கலக்கின்றனர். திடமான டீ தயார்.

* பழைய சோற்றை துணியில் கட்டி, வடித்துவிட்டு, மிக்சியில் போட்டு அடித்து, அதை வெண்ணெயுடன் கலக்கின்றனர். பார்க்க வித்தியாசம் தெரியாது. உருக்கினால் நெய் வராத வெண்ணெய் இது. பட்டர் பன் தயாரிக்க இது பயன்படுகிறது.

*நெய்யில் வனஸ்பதியை கலந்து, 'சுத்தமான பசு நெய்' என்று கூறி, விற்றுவிடுவர்.

* புதிதாக தயாரித்த புரோட்டாவுடன் பழைய புரோட்டாவை கலந்து விடுவர். 'கொத்து புரோட்டா' கேட்டால், பழைய புரோட்டாவில் குருமா, முட்டையை ஊற்றி, வெங்காயம், தக்காளியை வதக்கி, 'மணக்க, மணக்க' தந்துவிடுவர். நாக்கை சப்புக்கொட்டியபடி, நாம் சாப்பிட வேண்டியது தான்.

* மீன் மார்க்கெட்டுகளில் ஓரமாக சேரும் கழிவு மீன்களை, குறைந்த விலைக்கு வாங்கி வந்து, மாலையில் கடை போட்டு, 'செக்கச் செவேல்' என மசாலா தடவி, 'சுடச்சுட பொறித்த மீன்' என்று கூறி, வாசம் மூக்கைத் துளைக்க, ஊரைக் கூட்டி விற்று விடுவர். பெரும்பாலும் 'டாஸ்மாக்' கடைகளுக்கு அருகில் இவர்கள் கடை விரிக்கின்றனர்.

* ரோட்டோரத்தில் மலிவு விலையில், அண்டாக்களில் ஆவி பறக்க, 'கம, கம' மணத்தையும் பரப்பியபடி, பார்ப்பவர்களின் பசியை தூண்டும் பிரியாணியில், நெய் அல்லது ரீபைண்ட் ஆயிலுக்குப் பதில் மாட்டு கொழுப்பு எண் ணெய்யை கலக்கின்றனர். இதைத் தொடர்ந்து சாப்பிட் டால், இதய நோயை நாமே வலிய இழுத்து வருவதற்குச் சமம்.

* கோடை காலத்தில், கலர் கலராய், ஜூஸ் என்ற பெயரில் குளிர்ச்சியாக விற்கப்படும் திரவங்களில் சர்க்கரைக்குப் பதில், 'சாக்கரின்' கலக்கின்றனர். இதனால் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு உறுதி. பெரும்பாலும் வைகை கரையோரங்களில் இக்கடைகளை காணலாம்.

* கறிக்கோழியின் கழிவு, நோயால் இறந்த கோழி... இவற்றை'ஓசி'யில் வாங்கி வந்து, கவர்ச்சியான கலரில் மசால் தடவி, 'சிக்கன் 65' என்ற பெயரில், 100 கிராம் 12 ரூபாய்க்கு விற்கின்றனர். இதில் நோயை பரப்பும் அனைத்து கிருமிகளும் 'ஆஜர்' ஆகியிருக்கும்.

* இட்லி மாவில் பழைய சோற்றை ஆட்டி கலந்து, விற்கின்றனர். மல்லிகைப்பூ இட்லிக்கு சூப்பர் மாவு ரோட்டோரம் ரெடி.

* சில ஓட்டல்களில் அரிசி உலை வைக்கும்போதே சுண்ணாம்பை துணியில் கட்டி, அரிசியுடன் சேர்த்து கொதிக்க வைப்பர். இதில் வெந்த சோறு, 'விரைப்பாக' இருக்கும். அதிகம் சாப்பிட முடியாது. ஓட்டல்காரர்களுக்கு அரிசி செலவு குறையும்.இப்படி நம்மூரில் புதுப்புது உருவில் புதுப்புது கலப்படம் நடக்கிறது.பொதுமக்களே உஷார்: நமக்கு தெரிந்தவை இவை. தெரியாமல் இன்னமும் நிறைய கலப்படங்கள் நடக்கின்றன. இனியும் புதிய உத்திகள் கண்டுபிடிக்கப்படலாம். எனவே, 'அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று குறை கூறிக்கொண்டு இருக்காமல், பொதுமக்களும் கவனமாக இருக்க வேண்டும். எங்கும் சாப்பிடும் முன், அந்த கடையின் சுகாதாரம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.

பொது மக்களே உஷார்..!!