மக்கள் உரிமை படியுங்கள்

Thursday, July 15, 2010

இந்திய ரூபாய்க்கான சின்னம்-மத்திய அரசு வெளியிட்டது


டெல்லி: சர்வதேச தரத்திலான இந்திய ரூபாய்க்கான சின்னத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஐந்து பேர் கொண்ட குழு பல்வேறு சின்னங்களை ஆராய்ந்து உறுதியில், ஐஐடி கான்பூரில் படித்த மாணவரான உதயக்குமார் வடிவமைத்த சின்னத்தை தேர்வு செய்துள்ளது.மொத்தம் ஐந்து சின்னங்களை இந்தக் குழு ஆராய்ந்து அவற்றிலிருந்து உதயக்குமாரின் சின்னத்தை தேர்வு செய்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. மத்திய அமைச்சரவை இந்த சின்னத்தை தற்போது ஏற்ருக் கொண்டுள்ளது.தேவநாகரி எழுத்தான ‘Ra’ மற்றும் ரோமன் எழுத்தான ‘R’ ஆகியவற்றின் கலவையாக உதயக்குமார் உருவாக்கிய சின்னம் உள்ளது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் எண்ணத்தையொட்டி இந்த சின்னம் அமைந்துள்ளது.

பட்ஜெட் தாக்கலின்போது இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையிலான ரூபாய்க்கான சின்னத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறோம் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.தற்போது தேர்வாகியுள்ள சின்னத்தை நிதியமைச்சகம் அங்கீகரித்துள்ளது.இந்த சின்னத்தை வடிவமைப்பதற்காக போட்டி ஒன்றையும் நிதியமைச்சகம் அறிவித்திருந்தது. இதற்கான பரிசாக ரூ. 2.5 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்திய ரூபாய்க்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் வகையில் டாலர், யென், யூரோ உள்ளிட்டவற்றின் வரிசையில் தனி சின்னத்தை உருவாக்க மத்திய அரசு தீர்மானித்தது.

புதிய சின்னம் உருவாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இனிமேல் ‘Rs’ என்ற எழுத்து இனிமேல் பயன்படுத்தப்பட மாட்டாது. தற்போது ரூபிஸ் என்ற இந்த எழுத்தை பாகிஸ்தான், நேபாளம், இலங்கை ஆகியவையும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
உதயக்குமார் உருவாக்கியுள்ள சின்னம் இந்தியாவின் மூவண்ணம் மற்றும் கணிதத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. சின்னத்தில் உள்ள இரண்டு கிடைமட்டக் கோடுகளுக்கு இடையில் உள்ள இடம் இந்தியாவின் தேசியக் கொடியை நினைவூட்டுவதாக உள்ளது. இரண்டு பக்கவாட்டுக் கோடுகள் ‘equals to’ என்பதை நினைவூட்டுவதாக உள்ளது. அதாவது உலகப் பொருளாதாரத்திற்கு இந்தியப் பொருளாதாரம் சமமானது, எந்தவகையிலும் குறைந்ததில்லை என்பதை குறிப்பிடுவதாக இது அமைந்துள்ளது.

6 மாதத்தில் நடைமுறைக்கு வரும் ரூபாய்க்கான சின்னத்தை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். இன்னும் 6 மாதங்களில் இந்த குறியீடு நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் குத்துச்சண்டை வீரரின் உம்ரா பயணம் !


அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உம்ரா பயணத்திற்காகக் கடந்த ஞாயிறன்று (04-07-2010) சவூதிக்குச் சென்றுள்ளார். இஸ்லாத்தை அவர் ஏற்றபின்பு தன் பெயரை, மாலிக் அப்துல் அஜீஸ் என்று மாற்றிக் கொண்டார்.

இதேபோன்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் மைக் டைசனின் முன்மாதிரி வீரராகத் திகழ்ந்த முஹம்மது அலீயும் இஸ்லாத்தை ஏற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. காஸியஸ் மார்ஸெலஸ் க்ளே என்ற பெயரை இஸ்லாத்தை ஏற்றவுடன் முஹம்மத் அலீ என்று மாற்றிக் கொண்டிருந்தார் அவர்.

உம்ரா பயணத்திற்கு வந்திருந்த மைக் டைஸன், மதீனாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கும் வருகை தந்தார். அவரது வருகையின்போது இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத் தலைவர் டாக்டர் முஹம்மத் அல் ஒக்லா மற்றும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பயிலும் அமெரிக்க மாணவர்களைச் சந்தித்தார். நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசல் அருகில் மைக் டைசன் தங்கியிருந்த இடத்திலும் அவரைக் காண்பதற்குப் பெருங்கூட்டம் அலைமோதியது.

"என்னுடைய ரசிகர்கள் சவூதியில் இத்தனை பேர் இருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! என்றாலும், இறை இல்லத்தை தரிசிக்கவும் என்னுடைய இறைவழிபாடுகளை அமைதியான முறையில் நிறைவேற்றவும் இடையூறு செய்யாமல் என்னைத் தனித்து விடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார் டைசன்.

"இறை இல்லங்களை நேரில் தரிசிக்கையில் என்னால் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை" என்பதே அவரின் தொடர்ச்சியான கூற்றாக இருந்தது.மைக் டைசனின் உம்ரா பயணத்திற்கான ஏற்பாடுகளை சவூதியில் உள்ள கனேடியன் தஃவா அஸோசியேஷன் அமைப்பின் தலைவரான ஷெஹஜாத் முஹம்மத் அவர்கள் செய்துள்ளார்கள்.

"ஓய்வு பெற்ற குத்துச் சண்டை வீரர் என்றாலும் இன்னும் பிரபலமான நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் மைக் டைசன், எவ்வித ஆரவாரமும் இன்றி மிக எளிமையாக, மக்காவில் மற்ற உம்ராப் பயணிகளுடன் இரண்டறக் கலந்து பலமணி நேரம் தொடர்ச்சியாக தொழுதும், குர்ஆன் ஓதியும், பிரார்த்தித்தவாறும் அவரது உம்ராவை அமைதியாக நிறைவேற்றினார்" என்றார் ஷெஹஜாத்.

"மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் அடங்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகில் நின்று தன் கைகளை உயர்த்தி இறைவனிடம் பிரார்த்தித்தவாறு டைசன் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கதறி அழுது துஆ கேட்டுக் கொண்டிருந்தது எங்களுக்கெல்லாம் மிகுந்த நெகிழ்ச்சியைத் தந்தது" என்கிறார் ஷெஹஜாத்.மைக் டைசன் என்ற மாலிக் அப்துல் அஸீஸின் வாழ்க்கை, இந்தப் புனிதப் பயணத்திற்குப் பின்னர் இறைவழியில் புத்துணர்ச்சியுடன் பயணிக்க இன்ஷா அல்லாஹ் நாமும் பிராத்திப்போம்


நன்றி : சத்தியமார்க்கம்.காம்