மக்கள் உரிமை படியுங்கள்

Thursday, September 23, 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு: அமைதி காக்க வேண்டும்...! தமுமுக தலைமை வேண்டுகோள்


பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு செப்டம்பர் 24 அன்று வெளிவரும் நிலையில் தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் அமைதி காக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது.இந்த அறிவிப்பு இந்தியா முழுக்க எல்லா மொழி நாளிதழ்களிலும் விளம்பரமாகவும் வெளியிடப்பட்டுள்ளது.அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித், ராமர் கோயிலை இடித்து கட்டப் பட்டதா? இல்லையா? என்பது குறித்த வழக்கில்தான் தீர்ப்பு வெளிவரவிருக்கிறது.இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்குகள் தனி என்பது கவனிக்கப்பட வேண்டியது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருக்கும் அனைத்து ஜமாத்துகள், சேவை அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், மதரஸாக்கள், வட்டார மற்றும் உள்ளூர் அமைப்புகளுக்கு தமுமுக சார்பில் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பேரா.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் எழுதியுள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது..

“பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

இக்கடிதம் தங்களை பூரண சுகத்தோடும், இஸ்லாமிய சிந்தனை களோடும் சந்திக்கட்டுமாக.! 1992 டிசம்பர் 6&ல் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதும், 1995 முதல் தமுமுக தொடர்ந்து டிசம்பர் 6-ல் போராட்டங்களை நடத்தி வருவதும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியதும் நீங்கள் அறிந்த செய்திகளாகும்.

1948 முதல் நடந்துவரும் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் செப்.24, 2010 அன்று தீர்ப்பு வெளிவர இருக்கிறது.தீர்ப்பு நியாயமான முறையில் நமக்கு கிடைக்க அன்றாடத் தொழுகைகளிலும், ஜும்ஆ தொழுகைகளிலும் பிரார்த்திக்க வேண்டுகிறோம்.தீர்ப்பு நமக்கு சாதகமாக இருந்தால் அதை கொண்டாட்டமாகக் கருதாமலும், பாதகமாக வந்தால் எதிர்நடவடிக்கைகளில் ஈடுபடாமலும் இருக்கவேண்டும் என்பதை அனைத்து பள்ளிகளிலும் ஜும்ஆ தொழுகைக்குப் பின்பு அறிவிப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஒருவேளை தீர்ப்பு தேதி தள்ளிப் போனாலும், இதே அறிவுரையை அப்போதும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.பொது அமைதி, சட்டம்&-ஒழுங்கு ஆகியவற்றை பேணிக்காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து, அதற்காக இறைவனிடம் பிரார்த்திப்போமாக.தமுமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலும், முஸ்லிம்களின் சொத்துக்கள் இருக்கும் பகுதிகளிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு காவல்துறையிடம் கோரிக் கை வைத்துள்ளோம்.

மேற்கண்டவாறு தமுமுக தலைவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அயோத்தி தீர்ப்பு: திருமாவளவன் வேண்டுகோள்

சென்னை: அயோத்தி தீர்ப்பு எப்படி இருந்தாலும் இந்துக்களும் முஸ்லீம்களும் சகோதர உணர்வுடன், ஒற்றுமையைப் பேணிக் காக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள்
கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தி நிலம் யாருக்குச் சொந்தம் என்கிற வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக விசாரணையில் இருந்தது. அது தொடர்பான தீர்ப்பு வெளியாகவுள்ளது.அதனைத் தொடர்ந்து அகில இந்திய அளவில் ஆர்வமும் அச்சமும் கலந்த பெரும் பரபரப்பு பொதுமக்களைப் பற்றியிருக்கிறது. யாருக்கு எதிராக இத்தீர்ப்பு வழங்கப்பட்டாலும் நாடு தழுவிய அளவில் பெரும் வன்முறை வெடிக்கும் என்கிற அச்சம் அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் வெகுவாக மேலோங்கி உள்ளது.

இந்நிலையில் காமன்வெல்த் நாடுகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் எதிர்வரும் அக்டோபர் 3ம் தேதியிலிருந்து அக்டோபர் இறுதிவரை நடைபெறவுள்ளன. இதனால் சர்வதேச அளவிலும் அயோத்தித் தீர்ப்பு தொடர்பான அச்சம் பரவியுள்ளது.
ஒரு சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் ஜும்மா மசூதி அருகே வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலாப் பேருந்தில் வந்திருந்தபோது அப்பேருந்தின் மீது திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, ஒரு சிலர் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வு டெல்லியைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவ்வாறான சூழலில் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளிவரவிருப்பது வன்முறைக்கு வித்திடும் என்கிற பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு வன்முறை நிகழ்வுகளில் இஸ்லாமியர்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதைக் காலம் கடந்த நிலையில்தான் அறிய முடிந்தது. அதாவது இஸ்லாமியர்களின் பெயரால் இஸ்லாமிய விரோதச் சக்திகள் இந்திய எல்லைக்குள் வன்முறையைத் தூண்டி விடுகின்றனர் என்பதைக் காலம் உணர்த்தியிருக்கிறது.

இந்நிலையில் அயோத்தி வழக்கில் இஸ்லாமியருக்கு எதிராகத்தான் தீர்ப்பு வரும் என்பதைப் போலவும் அதனால் இஸ்லாமியர்கள் பெரும் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவார்கள் என்பதைப் போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர்.
எனவே வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் பொது அமைதியைக் கட்டிக்காப்பதற்கு வேறு எவரைக் காட்டிலும் இஸ்லாமியர்கள் கூடுதல் கவனத்துடன் கடமையாற்ற வேண்டும் என்பது இன்றியமையாததாகும்.

தமிழகத்தைப் பொறுத்த வரையில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றுகூடி, தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருப்பது பாராட்டுக்குரியதாகும். அத்துடன், தமிழக அரசும் பொது அமைதியை நிலைநாட்டுவதற்கு மேற்கொண்டு வருகிற முயற்சிகளும் வரவேற்கத்தக்கதேயாகும்.
மேலும் இந்தத் தீர்ப்பு வெளியாகும் நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமெனவும், குறைந்தது மூன்று நாட்களுக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

இந்துக்களும் இஸ்லாமியர்களும் வெவ்வேறு பண்பாட்டு நடைமுறைகளைக் கொண்டிருந்தாலும், தாங்கள் இந்த மண்ணின் மைந்தர்களே என்பதை மறவாமல் எத்தகையத் தூண்டுதலுக்கும் இலக்காகாமல் சகோதர உணர்வுகளுடன் ஒற்றுமையைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் சகோதர வாஞ்சையுடன் கேட்டுக்கொள்கிறது என்று கூறியுள்ளார் திருமாவளவன்.

பாஜக, ஆர்எஸ்எஸ்ஸை நம்ப முடியாது-காங்:

இதற்கிடையே, தீர்ப்புக்குப் பின்னர் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். போன்ற சங் பரிவார் அமைப்புகளும் வன்முறையில் ஈடுபடலாம். அவர்களை நம்ப முடியாது. இப்படித்தான் 1992ம் ஆண்டு அவர்கள் அளித்த வாக்குறுதியை நாடு நம்பியது. ஆனால் அப்போது நடந்த தவறுக்கு இன்று வரை நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறது. எனவே இவர்கள் விஷயத்தில் அரசு மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் எச்சரித்துள்ளார்.