மக்கள் உரிமை படியுங்கள்

Sunday, May 23, 2010

மங்களூரில் நெஞ்சை உருக்கும் சோகம் விமான விபத்தில் 159 பேர் உயரிழந்த சம்பவம்


மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை நெஞ்சை உருக்கும் மிகக் கோரமான விமான விபத்து ஏற்பட்டது. துபாயில் இருந்து மங்களூர் வந்த ஏர்&இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரை இறங்கும்போது ஓடுபாதையை தாண்டி மலையில் மோதி வெடித்துச் சிதறியது. இதில், 19 குழந்தைகள் உட்பட 159 பேர் கருகி பலியாகினர். அதிர்ஷ்டவசமாக 7 பேர் உயிர் தப்பினர். இந்தியாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மிக கோரமான விமான விபத்து இது.

ஏர் & இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமானது போயிங் 737&800 விமானம். 5 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட இது, நவீன தொழில்நுட்பங்களை கொண்டது. மங்களூர் & துபாய் இடையே பயணிகள் விமானமாக பறந்து கொண்டிருந்தது
வழக்கம்போல், நேற்று அதிகாலை 2.30 மணிக்கு துபாயில் இருந்து மங்களூருக்கு புறப்பட்டது. அதில், 160 பயணிகள் இருந்தனர். 6 விமான ஊழியர்கள் இருந்தனர். நள்ளிரவை தாண்டி அதிகாலையில் விமானம் புறப்பட்டதால் பெரும்பாலான பயணிகள் தூக்கத்தில் இருந்தனர்.

செர்பிய வம்சாவளியை சேர்ந்த விமானி ஜெட் குலுசிக் என்பவர் இந்த விமானத்தை இயக்கினார். இவர், 10,200 மணி நேரம் விமானத்தை ஓட்டிய பழுத்த அனுபவம் கொண்டவர். இவருக்கு உதவியாக இருந்தார் துணை பைலட் எச்.எஸ். அலுவாலியா. மங்களூரைச் சேர்ந்தவர். இவரும் 3,650 மணி நேரம் விமானத்தை ஓட்டிய அனுபவசாலி.
மங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வருவதற்காக 10 மைல் தொலைவில் வந்ததும், தரை இறக்குவதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கினார் குலுசிக். மங்களூரை
நெருங்கி விட்டதை, கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தார். 5.30 மணி அளவில் 4 மைல் தொலைவுக்கு விமானம் வந்து விட்டது. அப்போது, ‘வானிலை தெளிவாக இருக்கிறது. தரை இறங்கலாம்’ என்று கட்டுபாட்டு அறையில் இருந்து அனுமதி கொடுக்கப்பட்டது. உடனே, பயணிகளை உஷார்படுத்தினார் குலுசிகா, சீட் பெல்ட்டை போட்டுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.

மங்களூரில் சில நாட்களாக மழை பெய்தாலும், நேற்று காலை வானிலை நன்றாகவே இருந்தது. மெல்லிய தூறல் மட்டும் ஜில்லென்று அடித்துக் கொண்டு இருந்தது. விமான நிலையத்தை நெருங்கியதும், விமானத்தின் உயரத்தை குலுசிகா குறைக்கத் தொடங்கினார். காலை 6.28க்கு ஓடுபாதையை நோக்கி விமானத்தை இறக்கினார். அப்போது, ஓடுபாதையை விட்டு விமானம் சற்று விலகி இருப்பதை கண்டதும் பதற்றம் அடைந்தார்.

அதே மனநிலையில் விமானத்தை இறக்கினார். அப்போது, எதிர்பாராத சம்பவம் நடந்தது. விமானத்தின் டயர்கள் ஓடுபாதையை தொடவில்லை. அதற்கு பதிலாக, அதன் வயிற்றுப் பகுதி தரையில் தட்டி பயங்கர சத்தம் ஏற்பட்டது. விமானத்தின் பின்பக்க டயர்கள் வெடித்தன. அந்த அதிர்ச்சியில் விமானம் வேகமாக குலுங்கியது. மரண பீதியில் பயணிகள் அலறினர். குலுசிகாவும், அலுவாலியாவும் விபரீதத்தை உணர்ந்தனர். விமானத்தை இப்படியே இயக்கினால், அடுத்த சில நூறு அடி தூரத்தில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கும் என்பதை அறிந்தனர்.அதை தவிர்ப்பதற்கான மின்னல் வேகத்தில் செயல்பட்டார் குலுசிகா. விமானத்தை அப்படியே மேலே கிளப்பினார். அங்கும் விதி விளையாடியது. சில அடி உயரத்துக்கு விமானம் உயர்ந்தபோது, அங்கிருந்த ஆண்டனாவில் அதன் இறக்கை உரசியது. அவ்வளவுதான் விமானத்தின் போக்கு மாறியது. குலுசிகா கட்டுப்பாட்டை இழந்தார். அருகில் இருந்த கட்டிடத்தின் மீது உரசிய விமானம், பள்ளத்தாக்கில் பந்து போல் பறந்து சென்று விழுந்தது.

அந்த வேகத்தில் விமானம் துண்டாக உடைந்தது. எரிபொருள் டாங்க்கில் தீ பிடித்தது. அதன் ஜுவாலைகள் வானத்தை தொடும் அளவுக்கு உயர்ந்து கொழுந்து விட்டு எரிந்தது. அடுத்த 10 நிமிடங்களில் வெடிகுண்டு வைத்தது போல் விமானம் வெடித்தது. அதில் இருந்த பயணிகளை தீ கவ்வியது. உயிருடன் எரிந்த அவர்களின் மரண ஓலம், அந்த பள்ளத்தாக்கை அதிர வைத்தது. பள்ளத்தாக்கில் விழுந்து விமானம் உடைந்தபோது 8 பயணிகள் கீழே குதித்து தப்பினர்.

அருகில் வசிக்கும் மக்கள் விபத்து இடத்துக்கு விரைந்தனர். தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. மீட்டு பணிகள் தொடங்கின. ஆனால், அதற்குள் எல்லாமே முடிந்து விட்டது. விமானத்தில் கருகிய உடல்கள் கரிக்கட்டைகளாக குவிந்து கிடந்தன. பலர் சீல் பெல்ட் போட்டு இருந்ததால், இருக்கையிலேயே கருகிக் கிடந்தனர்.இந்த விபத்தில் 6 விமான ஊழியர்கள்,105 ஆண்கள், 32 பெண்கள், 18 குழந்தைகள் மற்றும் 4 பச்சிளங் குழந்தைகள் என 159 பயணிகள் பலியாகி விட்டனர்.

" இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஹூன் "