மக்கள் உரிமை படியுங்கள்

Saturday, July 10, 2010

மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம் !

திருமணம் ஆன புதிதில் மனைவியின் ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும், அசைவும் கணவனுக்குக் கவர்ச்சியாகத் தோன்றும். ஒரு குறிப்பிட்டக் காலத்தில் சலிப்புத்தட்ட ஆரம்பிக்கும். தூரத்தில் இருப்பதை இங்கிருந்து பார்த்தால் பச்சையாகக் காட்சியளிக்கும். அருகே சென்று பார்த்தால் ஏற்கனவே இருந்த இடம் பச்சையாகத் தோன்றும். பெரும்பாலான ஆண்களின் மனநிலை இப்படித்தான் அமைந்திருக்கிறது.ஒரு காரணமும் இன்றி மனைவியை வெறுப்பார்கள். அவளது ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள்.

திருமணம் நடந்து முடிந்த ஆரம்ப கட்டத்தில் அவள் மீது இருந்த மோகம் அவளது பெரிய குறைகளைக் கூட மறைத்தது என்றால் இப்போது ஏற்பட்ட சலிப்பு அவளது எல்லா நிறைகளையும் மறைத்துவிடும்.மனைவியைப் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இந்தக் காரணத்துக்காக இன்னொருத்தியை மணந்தால் அவளிடமும் பிடிக்காதவையும் சேர்ந்தே தான் இருக்கும். எந்த ஆண் மகனுக்கும் நூறு சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை. அமையப் போவதும் இல்லை.

''நீங்கள் எதையேனும் வெறுப்பீர்கள். ஆனால் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்'' என்று அல்லாஹ் குறிப்பிட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ يَحِلُّ لَكُمْ أَن تَرِثُواْ النِّسَاء كَرْهًا وَلاَ تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُواْ بِبَعْضِ مَا آتَيْتُمُوهُنَّ إِلاَّ أَن يَأْتِينَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ
فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَن تَكْرَهُواْ شَيْئًا وَيَجْعَلَ اللّهُ فِيهِ خَيْرًا كَثِيراً

''நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களைக் கட்டாயப்படுத்தி அவர்களுக்கு வாரிசாக ஆவது உங்களுக்கு ஹலால் (அனுமதி) இல்லை.அவர்கள் பகிரங்கமாக மானக்கேடான செயலில் ஈடுபட்டால் தவிர அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள்! அவர்களுடன் நல்ல முறையில் இல்லறம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடக் கூடும்'' (அல்குர்ஆன் 4:19)

இவ்வசனத்தின் இறுதியில் மனைவியருடன் அழகிய முறையில் இல்லறம் நடத்துமாறு அல்லாஹ் வலியுறுத்துகிறான். இது எல்லோரும் வலியுறுத்துகின்ற சாதாரண விஷயம் தானே என்று நினைத்துவிடக் கூடாது. ஏனெனில் இனிய இல்லறம் நடத்துமாறு வெறும் அறிவுரை மட்டும் இங்கே இடம் பெறவில்லை. மாறாக இனிய இல்லறத்துக்கு எது முக்கியமான தடையாக இருக்கிறதோ அந்தத் தடையையும் நமக்கு இனம் காட்டி அந்தத் தடையைத் தகர்த்தெறியும் வழிமுறையையும் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

இல்லற வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டவர்களை ஆய்வு செய்தால் அக்கரைப் பச்சை மனப்பான்மை தான் பெரும்பாலும் காரணமாக இப்பதை அறிய முடியும்.இந்த மனப்பான்மையை மனிதன் குறிப்பாக ஆண்கள் - மாற்றிக் கொண்டால் மட்டுமே அவர்களது இல்லறம் சிறக்கும் என்று படைத்த இறைவனுக்குத் தெரியாதா என்ன?
அதைத் தான் இவ்வசனத்தின் இறுதியில் சொல்லித் தருகிறான். 'நீங்கள் எதையேனும் வெறுப்பீர்கள். ஆனால் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்' என்று அல்லாஹ் குறிப்பிட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நமக்கு மனைவியைப் பிடிக்காமல் போய் விடலாம். நமக்குப் பிடிக்காமல் போய்விட்டதாக எடுத்த எல்லா முடிவுகளும் சரியானதாக இருக்காது. பல நேரங்களில் சரியான காரியங்களே நமக்குப் பிடிக்காமல் போய் விடும். கெட்ட விஷயங்கள் பிடித்துப் போய்விடும்.எனவே பிடிக்கவில்லை என்ற காரணத்தைப் பெரிதாக்கி இனிய இல்லறத்தைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று காரணம் கூறி அவளை வெறுப்பதை விட்டு உங்களுக்குப் பிடித்த அம்சங்கள் அவளிடம் ஏராளமாக இருப்பதைக் கண்டு திருப்தியடையுங்கள் என்று அல்லாஹ் அறிவுரை கூறுகிறான்.

''இறை நம்பிக்கையுள்ள ஆண், இறை நம்பிக்கையுள்ள தனது மனைவியை வெறுத்து விட வேண்டாம். அவளது ஒரு குணம் அவனுக்குப் பிடிக்காவிட்டால் அவளிடம் இவன் விரும்புகின்ற வேறு நல்ல குணம் இருப்பதைக் காண்பான் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

மனைவியைப் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இந்தக் காரணத்துக்காக இன்னொருத்தியை மணந்தால் அவளிடமும் பிடிக்காதவையும் சேர்ந்தே தான் இருக்கும். எந்த ஆண் மகனுக்கும் நூறு சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை. அமையப் போவதும் இல்லை.பல நல்ல குணங்களும் சில கெட்ட குணங்களும் கொண்டவளாகத் தான் எந்தப் பெண்ணும் இருப்பாள். அதைச் சரி செய்யப் போகிறேன் என்று போனால் அது நடக்கவே நடக்காது என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத் தருகின்றார்கள்.

''பெண்கள் வளைந்த விலா எலும்புகளைப் போன்றவர்கள். அதை நிமிர்த்தலாம் என்று முயற்சித்தால் அதை நீ உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளிடம் இன்பம் அடைந்து கொள்! என்பது நபிமொழி.'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

நமது முதலாளி, நமது நண்பன், நமது ஆசிரியர் இப்படிப்பட்ட குணம் உடையவர் என்று ஏற்கனவே நாம் தெரிந்து வைத்திருக்கும் போது - அவர் அப்படித்தான் இருப்பார் என்பதை முன்பே புரிந்திருக்கும் போது அதற்கேற்ப நாம் நடந்து கொள்வோமே தவிர அவரை மாற்ற முயலமாட்டோம்.

இதுபோல் தான், பெண்களுக்கு என்று தனிப்பட்ட போக்குகள் உள்ளன. ஆண்களின் நிலையிலிருந்து பார்த்தால் அந்தப் போக்குகள் ஆத்திரத்தை ஏற்படுத்தும் விதமாகத்தான் இருக்கும். எதற்கெடுத்தாலும் அழுவது, முகத்தை உர்ரென வைத்துக் கொள்வது, எவ்வளவுதான் வாரி வாரிக் கொடுத்தாலும் அதில் திருப்தி கொள்ளாமல் இருப்பது போன்ற தன்மைகள் இல்லாத பெண்களைப் பார்ப்பது அரிது.

இதுதான் பெண்களின் சுபாவம் என்பதை நாம் மனரீதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆண்களிடம் உள்ளது போன்ற குணத்தைப் பெண்களும் பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண் வேலை.அது ஒருக்காலும் நடக்கப் போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட நபிமொழி இதைத் தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது.

இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கித் தான் உங்களுக்குப் பிடிக்காத எத்தனையோ விஷயங்களில் எவ்வளவோ நன்மைகளை அல்லாஹ் அமைத்திருக்கிறான் என்று அல்லாஹ் சொல்லித் தருகிறான்.இனிய இல்லறத்தில் இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் பல உள்ளன. இப்போது புரிந்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம் இது தான்.

மனைவியர் விஷயத்தில் ஆண்கள் தமது மனப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆண்கள் என்பதால் பெண்களிடம் காணப்படாத சில தன்மைகள் எப்படி தங்களிடம் உள்ளதோ அதுபோலவே பெண்களிடமும் அவர்களுக்கே உரித்தான சில தன்மைகள் இருக்கத் தான் செய்யும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த மனமாற்றம் ஏற்பட்டு விட்டால் இல்லறம் இனிமையாக அமையும். ஆண் வர்க்கத்துக்கு அல்லாஹ் கூறும் அறிவுரையை அவர்கள் கடைப் பிடிக்கட்டும்!

இன்சாட்-4பி செயற்கை கோளில் மின்சார கோளாறு: டிவி- தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்பு


இன்சாட்-4பி செயற்கைக் கோளுக்கு மின் சக்தி வழங்கும் சோலார் பேனல்களில் ஒன்று பழுதாகி விட்டதால், இந்தியாவில் சில டி.வி. சேனல்களின் ஒளிபரப்பும், சில தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.தொலைத்தொடர்பு மற்றும் டி.வி. சேனல்கள் ஒளிபரப்புக்காக பல்வேறு டிரான்ஸ்பான்டர்களுடன் கூடிய இன்சாட்-4பி செயற்கைக் கோள் கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தயாரித்த இந்த 3 டன் எடை கொண்ட செயற்கைகோளின் ஆயுள்காலம் 12 ஆண்டுகள் ஆகும். அதில், 'க்யூ-பேண்ட்' டிரான்ஸ்பாண்டர்கள் 12, 'சி-பேண்ட்'டிரான்ஸ்பாண்டர்கள் 12 என மொத்தம் 24 டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன.இந்த செயற்கைக் கோளுக்கான மின் சக்தியை வழங்க, இரண்டு சோலார் பேனல்கள் உள்ளன. இவை சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றித் தருகின்றன.

இதில் ஒரு பேனலில் இருந்து மின்சாரம் உற்பத்தியாவது கடந்த 7ம் தேதி முதல் பாதிக்கப்பட்டது. இதனால், இன்சாட்-4பி செயற்கைக் கோளின் சக்தியானது 50 சதவீதமாகக் குறைந்துவிட்டது.இதனால் இப்போது 12 டிரான்ஸ்பாண்டர்கள் மட்டுமே செயல்படுகின்றன. இதன்காரணமாக இந்த செயற்கைக் கோளை நம்பியிருந்த சேவைகள 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் சில டி.வி. சேனல்கள் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இன்சாட் ரக செயற்கைக் கோள்களில் மின்சாரப் பிரச்சனை ஏற்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இரு முறை இந்த வகையான கோளாறுகள் ஏற்பட்டு, அவை பயனற்றுப் போயுள்ளன.

வேலூர் வி.ஐ.டி. மாணவர்கள் ஏவிய ராக்கெட்:

இதற்கிடையே வேலூர் வி.ஐ.டி.பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய ரோஹினி-200 (ஆர்.எச்) என்ற ராக்கெட் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள தும்பா ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.விண்ணில் செலுத்தப்பட்ட 2 நிமிடத்தில் ராக்கெட் 60 கிலோ மீட்டர் தூரத்தை எட்டியது.இந்த ராக்கெட்டில் வளிமண்டல ஆய்வு குறித்த கருவிகள் இடம் பெற்றிருந்தன. ராக்கெட் தயாரிப்பதற்கான முழு செலவையும் வி.ஐ.டி.பல்கலைக்கழகம் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

தமிழகத்தில் சிறுபான்மையினராக கருதப்படும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, பவுத்த, சீக்கிய, மற்றும் பாரசீக மதங்களை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வேண்டுவோர் பிளஸ் 1, பிளஸ் 2, ஐடிஐ, ஐடிசி, பாலிடெக்னிக், டிப்ளமோ இன் நர்சிங், ஆசிரியர் பயிற்சி, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு படிப்பவராக இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களையும் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

18 வயது பூர்த்தி அடையாத மாணவ, மாணவிகள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயருடன் கூட்டுக் கணக்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும்.இத்தகவல் சிறுபான்மை நல ஆணையர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.