மக்கள் உரிமை படியுங்கள்

Wednesday, June 9, 2010

காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற கப்பல்களை தாக்கி 18 பேரை கொன்று இஸ்ரேல் நாசகரம்



இஸ்ரேலினால் சுற்றி வளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டிருக்கும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியின் முற்றுகையை முறியடித்து அங்கு வாழும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சுமந்து வந்த கப்பல்களை மனிதாபிமானமற்ற இஸ்ரேல் கடற்படை தாக்கியது. இந்த கப்பல்களில் பயணம் செய்த 19 அமைதி போராளிகள் உயிர் இழந்தனர். 12க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

பிரிட்டன், அயர்லாந்து, அல்ஜீரியா, குவைத், கிரீஸ் மற்றும் துருக்கி நாடுகளைச் சேர்ந்த ஆறு கப்பல்களைக் கொண்ட இந்த விடுதலை கப்பல் குழுமத்தில் 50 நாடுகளைச் சேர்ந்த 700 அமைதியாளர்கள் பயணித்தனர். பாலஸ்தீனத்தின் ஆதராவளர்கள், நோபிள் பரிசு பெற்றவர்கள், பல்வேறு ஐரோப்பா நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கப்பல்களில் பயணித்தனர். காஸா மீது இஸ்ரேல் போட்டுள்ள தடையை முறியடிக்கும் நோக்கத்துடன் இந்த கப்பல் குழு பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சைப்பிரஸில் உள்ள துறைமுகம் ஒன்றிலிருந்து கடந்த ஞாயிறு (மே 30) புறப்பட்ட இந்த கப்பல் குழுமம் மறுநாள் பாலஸ்தீனத்தை அடைய இருந்தது.விடுதலை கப்பல் குழுமம் என்று பெயரிடப்பட்ட இந்த படகுகளை திங்கள் காலை பன்னாட்டு கடல் பகுதியில் இஸ்ரேல் கடற்படை மறித்து தாக்கியது. காஸா கரைக்கு 65 கி.மீ. தொலைவில் இந்த தாக்குதல் நடைபெற்றது.இந்த தாக்குதல் இஸ்ரேலின் கடல் எல்லைக்கு அப்பால் சர்வதேச கடல் பகுதியில் நடைபெற்றதை இஸ்ரேல் ஒத்துக் கொண்டது. ஆனால் தங்கள் தற்காப்பிற்காக இந்த நடவடிக்கையில் இறங்கியதாக இஸ்ரேல் கூறிக் கொண்டது.

கப்பல் குழுமத்திற்கு தலைமை தாங்கிய மார்வி மார்மரா என்ற கப்பலில் இஸ்ரேல் இராணுவத்தினர் ஏறும் காட்சியும் மேலே ஹெலிகாப்டர் அவர்களுக்கு பாதுகாப்பாக பறக்கும் காட்சியையும் அல்ஜஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது. மார்வி மார்மரா கப்பலில் பயணம் செய்த அல்ஜஸீராவின் செய்தியாளர் ஜமால் எல்சாயல் இந்த நடவடிக்கையின் போது செயல்திறனுள்ள ஆயுதங்களை இஸ்ரேல் படையினர் பயன்படுத்தியதாக தெரிவித்தார்.

கப்பலில் வந்தவர்கள் தங்கள் மீது ஆயுதத் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் தாங்கள் தற்காப்பு நடவடிக்கையில் இறங்கும் நிர்பந்தத்திற்கு உள்ளானதாகவும் இஸ்ரேல் தரப்பு தெரிவித்தது. ஆனால் தங்களை இடைமறித்த உடனேயே இஸ்ரேல் படையினர் சுடத் தொடங்கியதாக இந்த கப்பல் குழும பயணத்தை ஏற்பாடு செய்த காஸா விடுதலை இயக்கத்தினர் தெரிவித்தனர். கப்பலில் சரணடைகிறோம் என்பதற்கு அடையாளமாக வெள்ளை கொடி ஏற்றப்பட்டதாகவும் பயணிகள் யாரும் எவ்வித தாக்குதலிலும் இறங்கவில்லை என்று கப்பலில் பயணம் செய்த அல்ஜஸீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.தனது செய்தியாளருடன் ஒலித் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு சற்று முன்பு வாயை மூடுங்கள் என்று ஹிப்ரூ மொழியில் குரல் எழுப்பபடுவதை கேட்டதாக அல்ஜஸீரா கூறியது.



கப்பல் குழுமத்தின் தலைக் கப்பலான மாவி மர்மராவின் தலைமை மாலுமியை முதலில் இஸ்ரேல் கடற்படை தொடர்பு கொண்டு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளுமாறும் எங்கே செல்கிறீர்கள் என்பதை தெரிவிக்குமாறும் உத்தரவிட்டது. இதன் பிறகு இந்த கப்பல் குழுமத்தின் இரு மருங்கிலும் இரு இஸ்ரேல் போர் கப்பல்கள் சற்று தொலைவில் பயணிக்கத் தொடங்கின.

இதன் பிறகு இரவில் மோதலை தவிர்ப்பதற்காக கப்பல் குழுமம் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டு தனது பாதையை மாற்றத் தொடங்கியது. அனைத்து பயணிகளுக்கும் உயிர்காக்கும் கவசத்தை அளித்து விட்டு அனைவரையும் கீழ் தளத்தில் இருக்குமாறு மாலுமிகள் கேட்டுக் கொண்டனர். இத்தனைக்கு பிறகும் இஸ்ரேல் அப்பாவி பயணிகளை கண்மூடித்தனமாக தாக்கியது.காஸாவை நோக்கி புறப்பட்ட இந்த கப்பல்களில் 10 ஆயிரம் டன் மனிதாபிமான உதவி பொருட்கள் இருந்தன. இந்த கப்பலில் பயணம் செய்தவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்றும் இஸ்ரேலின் இந்த தாக்குதல் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது என்றும் அல்ஜஸீரா குறிப்பிட்டுள்ளது.

இந்த கப்பலில் பயணம் செய்த இஸ்ரேலில் இயங்கும் இஸ்லாமிய இயக்கத் தலைவர் ஷேக் ராயித் சாலாஹ் படுகாயமடைந்து பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தார்.
இஸ்ரேல் நடத்திய இந்த காட்டுமிராண்டி தாக்குதல்களுக்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.கப்பலில் பயணித்து உயிர் இழந்தவர்களுக்காக மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுஷ்திக்கப்படும் என்று பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அறிவித்துள்ளார்.துருக்கி, ஸ்பெயின், கிரீஸ், டென்மார்க் மற்றும் சுவிடன் ஆகிய நாட்டு அரசுகள் தங்கள் நாட்டில் உள்ள இஸ்ரேலின் தூதரை அழைத்து தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன.

துருக்கியில் இஸ்தான்புலில் உள்ள இஸ்ரேலின் தூதரகத்தை ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கப்பல் குழுமத்தை வழிமறித்து மன்னிக்க முடியாத குற்றத்தை இஸ்ரேல் புரிந்துள்ளது. இதன் விளைவை அது அனுபவிக்கும் என்று துருக்கியின் வெளிவிவகாரத் துறை ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.லண்டன் மாநகரிலும் பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இஸ்ரேலின் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்று ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹானியா வர்ணித்துள்ளார்.

No comments: